
வெகுநேரம்வரை
நாம் மௌனத்தில்
பேசிக்கொள்வது பிடித்திருக்கிறது,
உன் இசையின்
பாடல்கள்
எனக்குள் மழையாகிப்
பொழிகின்றன
எனது எண்ணங்கள்
ஒவ்வொன்றும்
தீயாகி எரியும்போது
நாமும் அதனுள்
எரிந்துபோகிறோம்
மலைகளில் பயணித்த
எனக்கு
இந்தப் பள்ளத்தாக்குகள்
மலைப்பாகவே இருக்கின்றன
நமது ஆன்மாக்கள்
ஒன்றாய் வேடிக்கைபார்த்த
சில சண்டைகள்
அடிக்கடி
நினைவில் வருகின்றன
புலராத ஒரு பொழுதில்
சிவப்பாய்த் திலகமிடக்
காத்திருக்கிறது
காலம்
அதுவரை
இந்தக் கவிதைகள்
நமக்கிடையே
காற்றாய் நிரம்பியிருக்கட்டும்
- சுரேந்திரகுமார்
No comments:
Post a Comment