Tuesday, March 29, 2011

வாழ்வை வழியனுப்புதல்

எனது பயணம்
சில பொழுதுகளில்
கனவுகளில்
தொடர்கிறது

விழிப்பு வந்தபோதும்
விழிகளிலேயே தங்கிவிடுகிறது
வியர்த்தமான பொழுதுகள்

இப்போது
பாலைவனத் தனிமையை
உணர்கிறேன்
முன்பும்
இங்கேதான் இருந்தேன்
ஆனால்
நீயிருந்தாய்!

வார்த்தைக்கு வார்த்தை
மௌனத்திற்கு மௌனம்
நம்மிடையே
நிகழ்ந்துகொண்டேயிருந்தது

இப்போது
வெறுமையின் திக்கில்
நகர்கிறது
வாழ்க்கை

தவறி வீழ்ந்தவனிலும்
தானாய் வீழ்ந்தவனின்
அனுபவம்
அலாதியானது

சிறிய
உணர்வுகள் கூட
சிலவேளைகளில்
அத்திவாரத்தையே பெயர்த்துவிடும்
ஆனால்
எனது அத்திவாரமே
அவைகளில்
உருவானதுதான்
அறிவாயா?

Friday, January 14, 2011

நிலவு வெளியில்....


கருஞ்சமுத்திர
வெளியூடே
பயணஞ்செய் !

நட்சத்திர
படகுகள்
வழிவிடும் .....

முகில்
அலை வந்து
மோதும்....

பூமி
முகட்டை
வெளிச்சஞ்செய் !

ஒரு கோடி
தொடக்கி
மறுகோடி வரை
மிதந்து போ....

மறுபடியும்
நாளை வா!

Friday, January 7, 2011

மரிக்கும் நீரூற்று

கடந்து வந்த
பாதையின்
நீட்சி
திரும்ப முடியா
பயணத்தின்
எல்லை
பாதைகள்
பிரிந்துகொள்ள
தனிமையுடன்
கைகோர்த்துக்கொள்கிறேன்
நினைவுகளின் கனதி
அழுந்துகிறது
இனி
நடப்பது
கடினம்....

Popular Posts