Thursday, July 8, 2010

நிலாப் பார்த்தல்


நிலவை விரும்பாதர்வகள் அதனை ரசிக்காதவர்கள் யாராவது இருப்பார்களென நான் நினைக்கவில்லை.சில மாதங்களிற்கு முன் வாசிக்கக் கிடைத்த இந்தக் கட்டுரையில் அழகாக நிலவைப் பார்த்து ரசிக்கும் அனுபவத்தை அளிக்கின்றார்.அறிமுகம் தேவையில்லை இந்தக் கட்டுரைக்கு.’கதா விலாசம்’ என்ற புத்தகத்தில் உள்ளது இது… பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த புத்தகத்தைப் பற்றி பார்ப்போம்… இப்போது இதை வாசித்துப் பாருங்கள்.


மனிதன் நிலவுக்குப் முதன் முதல் பயணம் செய்து கால் நுற்றாண்டைக் கடந்விட்டோம்,ஆனாலும் இன்று வரை...


திடீரென உலகம் ஒரு நெல்லிக்காயை விடவும் சிறியதைப் போலச் சுருங்கி விட்டது போன்று தோன்றுகிறது.தொலைவு என்பதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் போய்விட்டது.காரணம்,மின்சாரமும் நவீன விஞ்ஞான சாதனங்களின் வளர்ச்சியும் நம் இருப்பிடத்துக்குள் உலகைச் சுருக்கிட்டு இழுத்து வந்துவிட்டன.


தண்ணீரை விடவும் மின்சாரம் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது.மின்சாரமில்லாத வாழ்வைப் பற்றி நினைவுகொள்வது கூட அர்த்மற்றதாகிவிட்டது!


ஆனாலும் மின்சாரம் நுழையாத காலத்தின் இரவுகள் தந்த நெருக்கமும்,அரிக்கேன் விளக்கொளியிலிருந்து கசிந்து வரும் மஞ்சள் திரவம் போன்ற வெளிச்சமும் மனதின் மூலையில் அப்படியே படிந்து போயிருக்கின்றன.அந்த நாட்களில் சிறுவர்களுக்கு இருந்த ஒரே விளையாட்டு நிலா பார்த்தல்! இரவானதும் நிலா எங்கேயிருக்கிறது,எந்தப் பக்கம் போகிறது என்று அண்ணாந்து பாhத்தபடி,அதைத் தன் கூடவே கூட்டிக்கொண்டு தெருத்தெருவாக அலைவது ஒரு தீராத விளையாட்டு!


தெருவில் இருந்த அத்தனை பையன்களும் தங்களோடு ஒரு நிலவை தன் வீட்டுக்கு கூடவே கூட்டிப்போவதும் வழியில் அது மேகத்தில் மறைந்தபோது அங்கே நின்று நிலவை வெளியே வரும்படி கூப்பிட்டுக் கத்தியதும் எல்லா இரவுகளிலும் நடந்தேறியது.அந்த நாட்களில் வானில் ஒரேயொரு நிலவுதான் இருந்தது என்று எவராவது சொன்னால்,யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.


நான் என் வீட்டுக்கு கூட்டிவந்த நிலவு என் ஜன்னலுக்கு வெளியில்தான் நின்றிருந்தது.அதுபோல இன்னொரு நண்பன் அவனது நிலவை தன் வீட்டுக்குக் கூட்டிப் போயிருப்பான்.இப்படி எத்தனை சிறுவர்கள் கிராமத்தில் இருந்தார்களோ,அத்தனை நிலவுகள் இருந்தன.


நிலா வராத நாட்களில் நட்சத்திருங்களை ஆகாசத்திலிருந்து பறிப்பதற்காகக் கிறுகிறுவென தட்டாமாலை சுற்றுவோம்.நிலா முற்றிய நாட்களில் அதன் பால் வெளிச்சம் தெருக்களை,வீடுகளை குளிர்மை செய்யத் துவங்கும்.தெருவில் பாயை விரித்து தூங்குபவர்கள் யாரோ தங்களை நெருக்கமாக நின்று பார்த்துக்கொண்டு இருப்பது போல வெட்கமடைவார்கள்.அது போனற நாட்களில் கல் உரல்களில் தேங்கி நிற்கும் நிலா வெளிச்சத்தை ஆசையோடு நாய்கள் நக்குவதைக் கண்டிருக்கிறேன்.


நிலா பார்த்தல்,தாயின் இடுப்பில் அமர்ந்த நாளில் துவங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பால்யத்தில் என் வீடு வரை கூட்டி வந்த நிலவு இன்றும் எனது பயணத்தில் எப்போதும் கூடவே வந்துகொண்டு இருந்தது.எந்த ஊருக்குப் போகும்போதும் தெரிந்த நபர் கூட இருப்பது போல ஒரு நெருக்கம் கூடிவிடுகிறது.


கையில் காசில்லாமல் சுற்றியலைந்த நாட்களில் கர்நாடக மாநிலத்தின் பட்டகல்,பதாமி என்ற இடங்களில் உள்ள புராதன கோயிலையும் சௌந்தர்யமிக்க சிற்பங்களையும் பார்த்துவிட்டு,பீஜப்பூரை நோக்கி லாரியில் பயணம் செய்ய நேர்ந்தது.டிசம்பர் மாதத்தின் இரவு என்பதால் நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்தன.மேகம் இருண்டிருந்தது.லாரியில் ஓட்டுநரும் இரண்டு உதவியாளர்களும் முன்னால் இருந்ததால் என்னையும் இன்னொரு வயதான நபரையும் பின்னால் ஏறிக்கொள்ளச் சொன்னார்கள்.அந்த லாரியில் சிமென்டு மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தன.
லாரியில் ஏறியதும் தூங்கிவிட வேண்டியதுதான் என்று சுருண்டு படுத்தேன்.ஆனால்,குளிர்காற்றும் திறந்த ஆகாசமும் தூக்கத்தை நெருங்கவிடாமல் செய்தன.குளிர் தாங்கமுடியாமல் உடல் நடுங்கத் துவங்கியது.உட்கார முடியவில்லை.
என் மீதே எனக்குக் கோபமாக வந்தது.எதற்காக இப்படிக் காரணமில்லாமல் அலைந்துகொண்டு இருக்கிறேன்? எனக்கு என்னதான் வேண்டும். ஏன் இப்படி குளிரில் நடுங்கிக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்? ஏன யோசனை நீண்டு விரிய விரிய… என் மீதான ஆத்திரம் அதிகமாகக்கொண்டு இருந்தது.


குளிரில் நடுங்கியபடி கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு ஆகாயத்தைப் பார்த்தபடியே வந்தேன்.லாரி ஒரு மலைப்பாதையில் செல்லத் துவங்கியபோது,பள்ளத்தாக்கின் மீது ஒரு பருந்து வட்டமிடுவது போல தனியே மிதந்துகொண்டு இருந்தது நிலா.அது பௌர்ணமியின் மறுநாள் போலும்.மரங்களும் பாறைகளும் ஏன் அந்த மொத்த நிலப்பரப்பே வெண்ணிற வெளிச்சத்தின் சல்லாத்துணியை போர்த்திக் கொண்டு இருப்பது போலிருந்தது.
இரவு எத்தனை அழகானது என்பதை அந்த இரவில்தான் தெரிந்து கொண்டேன்.ஏதோ என் வீட்டின் வாசலில் கயிற்றுக்கட்டிலை போட்டுப் படுத்துக்கொண்டு நிலவைக் காண்பது போல அத்தனை நெருக்கம் கூடியது.அத்தோடு அதுவரை அழுத்திக்கொண்டு இருந்த எண்ணங்கள் கரைந்துபோய் இது போல ஒரு காட்சியைக் காண்பதற்கு கிடைத்த சந்தர்ப்பம் எத்தனை பேருக்கு கிடைக்கப்போகிறது என்று மனது சந்தோஷத்தில் பொங்கியது.

குழந்தைகள் நிலவை பார்த்துப் பாடுவது போல சத்தமாகப் பாட வேண்டும் போலிருந்தது.தானறியாமல் வாய் ஒரு பாடலை முணுமுணுக்கத் துவங்கியது.லாரியில் இருந்தபடி எழுந்து வட்டம் சுற்ற வேண்டும் என்று நினைத்தேன்.அருகில் சுருண்டுகிடந்த நபர் வேடிக்கையாக என்னையும் நிலவையும் பார்த்தார்.

இதே நிலவைத்தானே சிறுவயதிலிருந்து துரத்துகிறேன்.இந்தச் சந்திரன்தானே என் வீட்டுக் கிணற்றில் வீழ்ந்து கிடந்தது.கனவுகள் சூழ நான் உறங்கிக் கிடந்தபோது என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தது இந்த நிலவுதானே! ஏனோ ஆகாசமும,நட்சத்திரமும்,நிலவும் திடீரென கைதொடும் நெருக்கத்துக்கு வந்துவிட்டது போலிருந்தது.


லாரியில் நன்றாகப் படுத்துக்கொண்டேன்.என் தலைக்கு மேலாகக் கூடவே வந்து கொண்டு இருந்தது நிலா.புகை போல குளிர் நிரம்பிய பாதைகளில் லாரி கடந்து சென்றுகொண்டு இருந்தது.உலகில் ஒரேயொரு மனிதனும் ஒரு நிலவும் மட்டுமே விழித்திருக்கிறோம் என்பது போல நிலாவைக் கூடவே அழைத்துச் சென்றுகொண்டு இருந்தேன்.விடிகாலையின் மணம் காற்றில் படரத் துவங்கியபோது,திடீரெனத் தோன்றியது…
விட்டிலிருந்து வெளியேறித் துறவியாக அலைந்த நாட்களில் கௌதம புத்தரும் இதே நிலவைத்தானே பாரத்திருப்பார்! என்றால் இந்த நிலவு புத்தரின் தோழன் இல்லையா?


சங்க இலக்கியத்தில் வரும் பாணன் தன் காட்டு வழியில் கண்டதும் இதே நிலவுதானே? சிறைச்சாலையின் ஜன்னல் வழியாக பகத்சிங் இதே நிலவைப் பார்திருப்பார் அல்லவா? காலத்தின் காட்சியின் பெயர்தான் நிலவா? மனதில் இருந்த கசடுகள்,வலிகள் யாவும் கழுவித் துடைக்கப்பட்டுவிட்டன போலானது.
பொழுது புலர்ந்து,முதல் வெளிச்சத்தின் கீற்றுகள் வானில் தோன்றத் துவங்கியபோது நிலா மேற்கில் கரை தட்டி நின்ற படகைப் போல அசைவற்று அப்படியே நின்றிருந்தது.
ஓரிடத்தில் லாரி நின்றபோது கீழே இறங்கினேன்.சூரியன் உதயமாகியிருந்தபோது,மெதுவாக நிலா மறைந்துகொண்டு இருந்தது.என் கூடவே நிலவு துணைக்கு வரும்வரை எந்த ஊருக்கு வேண்டுமானாலும் சென்று வர முடியும் என்று மன தைரியம் உண்டானது.அதன் பிறகு இன்றுவரை ரயிலில்,பேருந்தில்,கார்களில் பயணம் செய்யும்போது,நிசப்தமாக ஒரு மீன் தண்ணீரில் நீந்துவது போல நிலவு தொலைவில் அலைவதைப் பார்த்தபடி நீள்கிறது பயணம்.


தற்செயலாக இரண்டு நாட்களுக்கு முன்னால் ஓர் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு யாவரும் மொட்டைமாடியில் உறங்க வேண்டியதாகியது.நகரத்துக்கு வந்த பிறகு குழந்தைகள் முதன் முறையாக நிலா பார்த்தபடி உறங்கும் முதல் நாள் அது.நட்சத்திரங்களையும்,நிலவையும்,வழி தெரியாமல் அலையும் பறவைகளையும் பார்த்தபடி படுத்துக் கிடந்தோம்.ஏதாவது கதை சொல்ல வேண்டும் என்று பையன் கேட்டதும் என் நினைவில் வந்த கதை பி.எஸ்.ராமையாவின் நட்சத்திரக் குழந்தைகள்.
இக்கதையை எனது கல்லூரி நாட்களில் வாசித்திருக்கிறேன்.ஒரு கூழாங்கல் தண்ணீருக்குள் அமிழ்ந்து கிடப்பது போல இன்று வரை ஈரம் உலராமல் அப்படியே மனதில் இருக்கிறது.


பி.எஸ்.ராமையா மணிக்கொடி இதழை நடத்தியவர்.சிறந்த சிறுகதையாசிரியர்.அவரது இக்கதை சிறந்த தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகள் யாவிலும் இடம்பெற்றுள்ளது.நட்சத்திரக் குழந்தைகள் கதையில் ரோகிணி என்ற ஆறு வயதுச் சிறுமியும் அவளது அப்பாவும் ஒரு நாள் ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.நட்சத்திரங்களுக்கு அப்பா இருக்கிறாரா என்று ரோகிணி கேட்கிறாள்.சுவாமிதான் நட்சத்திரங்களுக்கு அப்பா என்று பதில் சொல்கிறார்.உடனே சிறுமி கேட்கிறாள்… ‘சுவாமி உன்னைப் போல அழகாக இருப்பாரா அப்பா?’ அவரும்,’சுவாமியைப் போல அழகானவர் உலகத்திலேயே வேறு யாரும் கிடையாது!’ என்கிறார்.ரோகிணி அதை ஆமோதிப்பது போல சொல்கிறாள்… ‘அதனால்தான் நட்சத்திரங்கள் இத்தனை அழகாக ஜொலிக்கின்றன!’ அப்போது ஒரு நட்சத்திரம் எரிந்து கீழே விழுகிறது.அதைக் கண்ட சிறுமியின் தந்தை ‘யாராவது பொய் சொல்லிவிட்டால் ஒரு நட்சத்திரம் இப்படி உதிர்ந்து விழுந்துவிடும்!’ என்கிறார்.இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு இரவில் வானத்திலிருந்து எரிந்து விழும் நட்சத்திரம் ஒன்றைக் கண்டு வேதனை தாங்க முடியாமல் ரோகிணி அழுகிறாள்.அப்பா சமாதானப் படுத்தும்போது.’நம் ஊரில் யாரோ பொய் சொல்கிறார்கள் அப்பா.
ஒரு நட்சத்திரம் உதிர்ந்து போனால் கடவுள் எவ்வளது வேதனைப்படுவார் அதை நினைத்துத்தான் வருத்தப்படுகிறேன்!’ என்கிறாள் குழந்தை.குழந்தையின் மனதும்,வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத துக்கமும் கொண்ட கதை இது.எப்போதாவது பின்னிரவில் விழித்துக்கொண்டு ஜன்னலைத் திறந்து பார்க்கும்போது சொந்த ஊரை நினைவுபடுத்துகிறது நிலா.குற்றவாழியைப் போல்.
பொய் சொல்வதால் நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும் என்பது உண்மையாக இருந்தால்.இன்று வானில் ஒரு நட்சத்திரம் கூட இருக்காது.ஆனாலும்,இக்கதையை வாசிக்கும்போது, கடவுளுக்காக குழந்தையைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

Popular Posts