
பலசமயங்களில்
கவிதைகள்
எங்கினும் கனன்றுகொண்டேயிருக்கின்றன…
எப்போதும்,
அவை பூக்கள் போல் அல்ல…
‘பச்சை தேவதை’
சல்மாவின் கவிதைகள்
முன்னையதைப் போல் இல்லா
எல்லைமீறல்கள் அதிகம் !
இருப்பினும் வெகு இயல்பு…
எல்லாவற்றையும் மீறி
சில கவிதைகள்
மனதில் தரிக்கிறது
பகிர்வதில்
எனக்குத் தயக்கம் இல்லை….
திசைபழகுதல்
யாருடைய ஆட்காட்டி விரலையோ
பற்றியபடிதான்
திசைகளை வகுக்கிறோம்
திசைபழகிய பிறகு
தன் கைநழுவுமாவென்கிற
தாளவியலாத எளிய பதற்றத்தில் சீர்குலைகின்றன
எல்லா உறவுகளும்
மௌனத் துரு
சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மௌனம்
எளிதாகவேயிருக்கிறது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும் கூட
மௌனத்தைப் பற்றிக்கொள்வது
மரணக்குறிப்பு 1
அவன் கொல்லப்பட்ட நாளில்
மழை பெய்துகொண்டிருந்தது
பெரும் கருணையுடன்
கொல்லப்பட்டவனின் மனைவியிடம் படிகிறது
எதிர்வரப்போகிற
காலத்தின் தனிமை
வந்திருப்பவர்களுக்குச்
சிறந்த உணவொன்றினைத்
தயாரிக்கத் தொடங்கின
துக்கம் கலைந்த சில உறவுகள்
யாரிடமும்
வலுவாகப் பதியாத இழப்பு
ஒரு ரகசியச் செய்தியாய்
கூட்டத்தில் ஊருடுவி அலைகிறது
ஊருக்குப் போய்விட்டுத்
திரும்புவானென்கிற
எளிய நம்பிக்கை போதும்
குழந்தைகளுக்கு
விடியுமுன்
எஞ்சிய ஓலமும்
மழைநீரெனக் காய்ந்து
வீடு விறைப்புற்றுவிடுமென்பதைச்
சலசலக்கிற குரல்கள்
உறுதிப்படுத்துகையில்
அவனது மரணம்
என்னிடத்தில் இன்னொருமுறை நிகழ்கிறது
8 comments:
மறு முறை நிகழும் மரணம் தான் பயம் கொள்ள வைக்கும் இல்லையா
உண்மைதான் பத்மா.... மறுமுறை நிகழும் மரணம் ஒருமுறை இல்லை பலமுறை நிகழ்கிறது...
ரொம்ப அருமையா இருக்குக்கு எல்லா கவிதைகளும்
நன்றி வேலு !
good one..surenthiraa
Thank you Haris...
அருமையான கவிதைகள்!
நன்றி பிரியா...
Post a Comment