Sunday, August 11, 2013

மழை

புலராத பொழுதில்
தொடங்கிய 
சிறுமழை

ஜன்னல் வழி
வந்து என்னைத்
துயில்கலைத்துப்
போனதின்று

பெயர் தெரியாக் குருவியொன்று
இடம்தெரியாது
மழைக்கொதுங்கியது,
வீட்டுக்குள் வந்த
விருந்தாளிக்கு என்ன கொடுக்க?

வருகையின் சத்தம்
கூரையில் தெறிக்கும் சத்தம்
மண்ணை முத்தமிடும் சத்தம்
இலைகளில் படியும் சத்தம்
சோவென்ற சத்தம்
மழையின் சத்தம்,
இளையராஜாவின் பாடலொன்று
மனதிற்குள் வந்துபோகும்

மின்சாரக் கம்பிகளில்
முத்துக்கள் கோர்க்கும்
மழை

கருவானம்
மெல்லிருள்
குளிர்காற்று
மண்வாசம்
சிறுவெள்ளம்
நீரக்குமிழ்,
கவிதைக்கு என்ன தலைப்பிட?

தென்னை ஓலைகளில்
சொட்டும் துளி
ஓட்டுவீட்டிற்குள் ஒழுகும் துளி
மண்ணில் இட்டதுளி
கொடிக்கயிற்றில் தெறிக்கும் துளி
கைகளில் நான்-
வாங்கிய துளி
எதற்கு விலை அதிகம்?

சுடச்சுடத் தேநீர்
குவளையில் தீர
இன்னொன்று கேட்கலாம்
அம்மாவிடம்

மழை இன்னும் விடவில்லை....

Sunday, August 4, 2013

இருந்தாலும் நாம் நண்பர்கள்தான்

சினேகம் இல்லா
முதற்சந்திப்பு

நமக்குள் எப்போதும்
சரியாக இருந்ததில்லை
நட்பு

ஞாபகம் இருக்கிறதா?
எப்போதும்
சண்டையை
நீயேதான் தொடங்குவாய்

சட்டெனக்
குரலுயர்த்துவாய்
பின் கண்ணீர் சிந்த
கூர்வாள்கள்
எனை நோக்கித்
திரும்பும்,
நீ மறைவாய்ப் புன்னகைப்பாய்

நம் எதிரெதிர்
குணங்களில்
பகை வளர்த்து
விருட்சமாகிப் போக,
அடியில்
நிழல் தேடுகிறார்கள்
சில மனிதர்கள்

அகந்தை
அடங்காத பெருந்தீ
இன்னும்
அதில் நாம்
எரியத்தான் வேண்டுமா?


Popular Posts