எங்கும்
பசுமையாய் நெல் வயல்கள் பெருவெளியாய்
கண்ணுக்கு எட்டியதூரம் வரை விரிந்திருந்தது. வெளிநடுவே
ஓர் தாமரைக்குளம். அதன் நீர் அணைகளில்
முட்டி வழிந்துகொண்டிருந்தது. முழுதாக இல்லாமல், அங்கங்கே
தாமரைகள். நான்கு புறத்தேயும் துருசுகள்.
வானம் அவசரமாய் மழை மேகங்களை ஒன்றுகூட்டி
தூறல்கள் மாநாட்டை அறிவித்துக்கொண்டிந்தது.
கொக்குகள் வயல்களில் இருந்து அணிவகுத்துப் பறந்தன.
அவைகளின் வெண்மை வானத்தின் கருமையிலும்
வயல்களின் பச்சையிலும் பளிச்சிட்டன.
வயல்களிற்கு நடுவே அமைந்திருந்த பிள்ளையார்
கோவிலின் மணியோசை ஒலித்து பின்னே
எதிரொலித்துக் கொண்டிருந்தது.

காற்றில்
ஈரலிப்பு!
குளக்கட்டுப்
புல்களில் என் பாதங்கள் பதிய
நடந்துகொண்டிருந்தேன். பல வருடங்களின் பின்னால்
இங்கே வருகிறேன். இந்த இதமான காலநிலையும்,
என் கண்முன்னே விரிந்திருந்த அழகான காட்சியும் ஒருவிதமான
சிலிர்ப்பைத் தருகிறது. குளத்தின் துருசுப் படிகளில் இறங்கி கடைசிப் படியில்
இருந்தவாறு கால்கள்
இரண்டையும் மெதுவாய் நீரிற்குள் வைக்க ஒருவிதமான உற்சாகம்
கரைபுரண்டோடியது.
என் பதின்ம வயதுகள்வரை
நான் இங்கே என்னைத் தொலைத்து
மகிழ்ச்சியில் திளைத்த நாட்களை எண்ணிப்பார்க்கிறேன்.
மீண்டும் அந்த நாட்கள் வரப்போவதில்லை,
ஆயினும் அதையெல்லாம் நினைக்கையில் மனதில் இனம்புரியாத உணர்ச்சிகள்
பெருக்கெடுக்கிறது.
என் நினைவு தெரிந்து சிறு
வயதில் அம்மாவின் கரங்கள் பிடித்து முதன்முதலில்
கோவிலுக்குப் போகையில் இதே குளக்கட்டில் நடந்துபோயிருக்கிறேன்.
அங்கே சிறுவர்கள் தொடக்கம் இளைஞர்கள் வரை குளத்தில் நீச்சலடித்துக்
கொண்டிருந்தார்கள். துருசுக்
கட்டுகளில் ஏறி பல்டி அடிப்பார்கள்,
குளத்தைக் குறுக்கே நீந்திக் கடக்கப் போட்டியிடுவார்கள், இன்னும்
கொஞ்சப் பேர் நீச்சல் கற்றுக்கொண்டிருப்பார்கள்.
அந்தக்
காலத்தில் நாங்கள் நீச்சல் தடாகம்
ஒன்றைக்கூட நேரில் கண்டதில்லை. எங்களுக்கு
இந்தக் குளம்தான் எல்லாவற்றையும் கற்றுத்தந்தது. நீச்சலை மட்டுமல்ல,
எங்கள் நட்பை வளர்க்கும் இடமாக,
எங்கள் உடற்பயிற்சிக்கூடமாக, பரீட்சை நாட்களில் மனதை
அமைதியடைய வைக்கும் குருவாக, ஒரு தோழனாய் , எல்லாமுமாய்
இருந்திருக்கிறது.
ஐம்பூதங்களில்
ஒன்றுதான் நீர். ஐம்பூதங்களான நிலம்,
நீர், தீ, ஆகாயம் என்னும்
ஐந்தும் நமக்கு வெளியிலும், உடலுக்குள்ளும்
இருக்கின்றன. நமக்கும்
நீரிற்கும்
இடையிலான தொடர்பு அற்புதமானது. நீந்தும்
போது, ஒரு விதமான ஆன்மவிழிப்பை
அடைந்து கொள்ள முடியும். நீருடன்
ஒன்றித்து நீந்தும்போது நம் அகம் விழித்துக்கொள்ளும்.
இறந்த
காலத்தினதும்
எதிர்காலத்தினதும் நினைவுகளற்ற நிகழ்கால அனுபவத்தை உணர முடிகிறது. நீச்சலடிக்கப்
போவோமா என்று யாராவது கேட்டால்
உடனே எங்களுக்குள்;
ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டுவிடும். அதன் அனுபவம் அப்படிப்பட்டது.
நீச்சல் அடிக்கும் வாய்ப்புள்ள எந்த இடத்திலும், மற்றவர்கள் நீந்திக்கொண்டிருப்பதைப்
பார்த்திருக்க எவராலும் தங்கள் மனதைக் கட்டுப்படுத்திவிட
முடிவதில்லை.
இப்பொழுது
இங்கு நிலவும் வெப்பமான காலநிலையில்
எங்காவது அமைதியாய் நீந்துவதற்குத்தான் மனம் விரும்புகிறது. அது
ஒரு கிணறாகக்கூட இருந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
முதன்முதலாய்
எனக்கு நீந்தும் ஆசை வந்து குளத்தில்
கால்களை வைத்தேன். உற்சாகம் கரைபுரண்டோடியது. அப்போது எனக்கு எட்டுவயதுதான்.
எங்கள் வயதுகளை ஒத்த சிறுவர்கள்
எல்லாம் நீச்சல் பழகும் ஆசையில்
ஆழமில்லாப் பகுதியில் கைகளையும் கால்களையும் படபடவென அடிக்க அவர்களுக்கு நீச்சல்
வந்ததோ இல்லையோ, நீர் மட்டும் நாலுபுறமும்
சிதறிப் பறந்துகொண்டிருந்தது.
'ஒல்லித்தேங்காய்'
அதாவது உள்ளே ஒன்றுமே இல்லாமல்
டம்மியாய் இருக்கும். அது நீரில் இலகுவாய்
மிதக்கும். இரண்டு ஒல்லித்தேங்காய்களை எடுத்து இணைத்துக்கட்டி,
அதனை வயிற்றிற்குக் குறுக்கே வைத்து உடலை சமநிலைப்படுத்துவோம்.
அதனை அணிந்துகொண்டு நீந்துவது எளிது. ஒரு கட்டத்தில்
அதுதேவைப்படாமல் போகும்,
அந்தக் கணம் அற்புதமானது. ஏதோ
ஞானம் கிடைத்த மகிழ்ச்சி. ஏதோ
ஒரு நாள் நாங்களாய் நீச்சலடிக்கும்
தருணம் வாய்க்கும்.
நான் அனுபவித்தேன். கைகளை நீரில் வெட்டிக்கொண்டு
முகத்தை லாவகமாய் மாறி மாறித் திருப்பிக்
கொண்டு நீச்சலடித்தேன். நானாய்
பழகிக்கொண்டேன். இங்கு எல்லோரும் அப்படித்தான்
பழகுவார்கள்.
குளத்திற்கு
பக்கத்திலே இருக்கும் பயிரிடப்படாத வயல்கள்தான் எங்கள் தற்காலிக கிரிக்கெட்
மைதானமாக இருந்தது. விடுமுறை நாட்களில் காலையிலிருந்து வெய்யில் உச்சி மண்டையைப் பிளக்கும்வரை
விளையாடிக் களைத்துப்போய் குளக்கரையில் வளர்ந்து நிற்கும் மரநிழல்களில் படுத்துவிடுவோம்.
களைப்பாறிய
பின்னால் எல்லோரும் ஓடிப்போய் துருசின் உச்சியில் இருந்து ஒவ்வொருத்தனாய் ஆழத்தில்
குதித்து, சுழியோடி நீண்டதூரம் கீழாக நீந்தி எங்கோ
ஒரு இடத்தில் மிதப்போம்.
பசி வயிற்றைக் கிள்ளும். அருகே இருக்கும் வெற்று
வளவுகளுக்குள் புகுந்து, தேங்காய்களையும் மாங்காய்களையும் பறித்து உண்டு களைத்து
மீண்டும் குளக்கரையை நாடியிருப்போம்.
சில போட்டிகள் கூட வைத்துக்கொள்வோம். ஆழத்தில்
போய் கல் எடுத்துவருவது. சில
பயல்கள் ஆழமாய் போகப்பயந்து வெளியில்
போய் கல்லை எடுத்து பொக்கட்டில் வைத்துக்கொண்டு
குதித்துவிட்டு, மேலே கொண்டு வந்து
காட்டுவார்கள்.
நானும்
ஒரு வீரன்தான் என்று பீற்றிக்கொள்வார்கள்.
இதே குளம் பலபேரைக் காவுகொண்டிருக்கிறது.
அந்தப் பயத்திலே நாங்கள் இங்கே நீந்துவதற்கு
வீட்டில் தடைவிதித்திருந்தார்கள். நாங்கள் வீட்டிற்குத் தெரியாமல்
நீந்துவோம். காற்சட்டைகள் தொப்பலாய் நனைந்திருக்கும் அது காயும் வரை
காத்திருந்து வீடுசெல்வோம். சில எட்டப்பர்கள் வீடுகளில்
போட்டுக்கொடுத்துவிடுவார்கள்.
பிடிபட்டால் அன்று நன்றாக வேண்டிக்கட்ட
வேண்டியதுதான்.
சிலவேளைகளில்
பின்மதிலால் பாய்ந்து, வீட்டிற்குள் நைசாக நுழைந்து நனைந்த
உடைகளை மாற்றிவிட்டு எதுவும் தெரியாதது போல
உள்ளே இருப்போம். கில்லி படத்தில் விஜய்
தன் வீட்டிற்குள் நுழைய ஒரு வழி
வைத்திருப்பாரே அதைப்போல, எங்களுக்கும் நிறைய வழிகள் இருந்தன.
சில சுவாரஷ்யங்களும் நடக்கும். ஓரு முறை வேறு
இடத்திலிருந்து வந்த ஒரு திருட்டு
கோஷ்டி இங்கே நீராடிக்கொண்டிருக்கும்போது அகப்பட்டது. பிறகென்ன அவர்களைக்
கும்மி எடுத்து போலீஸில் பிடித்துக்கொடுத்துவிட்டு,
ஊர் முழுக்க தம்பட்டம் கட்டிக்கொண்டு
திரிந்த கதையெல்லாம் இருக்கு.
ஒருமுறை
எங்கள் பள்ளிக்கூட நண்பர்கள் குளத்தைப் பார்க்க வந்திருந்தார்கள்.குளத்தைப்
பார்த்ததும் தாமதம், அதில் நான்கைந்து
பேர் சேர்ட்டைக் கழற்றிப்போட்டுவிட்டு அடுத்தடுத்து துருசிற்குள் குதித்தார்கள். அதற்குள் ஒருவன் மட்டும் மேலே
வந்ததும் ஏதோ கத்த நினைத்துவிட்டு
மீண்டும் உள்ளே போவதும் வெளியே
போவதுமாய்...
தம்பிக்கு
நீச்சல் தெரியாது... !
அவனை ஒருவாறு இழுத்துவந்து, வயிற்றையெல்லாம்
அழுத்திவிட்டு நீரை வெளியேற்றிய பின்னால்.
'உனக்குத்தான்
நீந்தத் தெரியாதே, பிறகென்ன துணிச்சலில குதிச்சனி?'
'நான் இவங்கள் குதிச்சு நீந்தினதப்
பார்த்திட்டு நினைச்சன், குதிச்சா தானா மேல வரலாம்
அப்பிடியே கையையும் காலையும் அடிச்சு நீந்தலாம் எண்டு'
அவன் மேல் எந்தத் தப்பும்
இல்லை. ஏனென்றால் யாழ்ப்பாணம் டவுணில் இருக்கும் அவனுக்குக்
குளங்களைப் பற்றியும், நீச்சலைப் பற்றியும் பெரிதாய்
தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. 1996களில் நீச்சல் தடாகத்தைக்கூட
கண்ணால் கண்டதில்லை நாங்கள். அவனால் நிச்சயமாய் அந்தச்
சம்பவத்தை தன் வாழ்நாளில் மறந்திருக்க
முடியாது.
கோடை வெய்யிலில் குளத்து நீர் வற்றிப்
போகும்.
அப்போதெல்லாம் நாங்கள் வயற்கிணறுகளில் நீச்சலடிப்போம்.
எங்களைக் கண்டு கிணற்றுச் சொந்தக்காரர்
கம்புடன் வந்தால் பழிப்புக் காட்டிவிட்டுப்
போன கதைகளை இன்றும் ஞாபகத்தில்
வைத்திருந்து சொல்லுவார்கள் எங்கள் ஊர் பெரியவர்கள்.

மழை காலத்தில் தூறல் போடும் மழையில்
நீந்தும்போது அவ்வளவு சுகமாக இருக்கும்.
அனுபவித்தவர்களிற்குத்தான்
அந்த சுகம் தெரியும்.
இப்பொழுது
எல்லா இடங்களிலும் நீச்சல் தடாகங்கள் இருக்கின்றன.
நிறைய வசதிகளோடு under wager glass, swimming suite போட்டு
ஸ்டைலாக
நீந்த முடியும். ஆனால் எங்கள் ஊர்க்குளத்தில்
நாள்முழுக்க நீச்சலடிக்கும் சுகத்தை இதுவரையும் எந்த
நீச்சல் தடாகமும் எனக்குத் தந்ததில்லை.
நீச்சல்
தடாகம் ஒன்றில் குளிக்கும்வரை ஒருவிதமான
ஆசை மனதுக்குள் இருந்தது என்னவோ உண்மைதான், ஆனாலும்
முதன்முறை அங்கு நீந்தும்போது அதன்
செயற்கைத் தனமான வசதிகள் என்னை
ஈர்க்கவில்லை. குளத்துக்குள் நாள்முழுக்கக் கிடந்திருக்கிறோம், ஆனால் இங்கு சில
மணித்தியாலங்களுக்குள் அலுப்புத் தட்டிவிடுகிறது.
யாழ்ப்பாணத்தின்
வரலாற்றில் மன்னர்களால் கட்டப்பட்ட குளங்கள் எல்லாம் தூர்வாராது மோசமான
நிலையிலே உள்ளன. தொண்ணூறுகளிற்குப் பிற்பட்ட காலங்களில்கூட
அநேகமான குளங்கள் நல்ல நிலையில்தான் இருந்தன.
ஆனால் இன்றைய நிலையில் எல்லாம்
அழிவடையும் நிலையில் இருக்கின்றன.
இன்றைய
தலைமுறையைச் சேர்ந்த சிறுவர்களால் இதையெல்லாம்
அனுபவிக்க முடியாது. இயற்கை நமக்குத் தந்த
எல்லாவற்றையும் அழித்து
அவற்றையெல்லாம்
செயற்கையாய் உருவாக்கி அதற்குள் சுகம் காண நினைக்கிறது
மனித இனம்.
இதுவரை
அழித்த எல்லாவற்றையும் மீண்டும் உருவாக்க எத்தனையோ ஆண்டுகள் ஆகலாம் அல்லது மீள
உருவாக்க முடியாமல்கூடப் போகலாம், இவற்றை மனதிற்கொண்டு இருக்கும் சிலவற்றையாவது அழியாமல் பாதுகாக்க வேண்டும். இதற்கான பொறுப்பை நாங்கள்
ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
பி.கு: மூன்று வருடங்களுக்கு
முன்னால் புளொக்கில் எழுதவெளிக்கிட்டு, கொஞ்சம் கவிதைகளும் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் சில கட்டுரைகளையும் எழுதினேன்.
இதுவரை ஏதாவது உருப்படியாய் ஏதாவது
எழுதியிருக்கிறேனா என்றால் இல்லை என்றுதான்
சொல்லவேண்டும். இனிமேல் தீவிரமாய் எழுதவேண்டும்
என்று வெளிக்கிட்டிருக்கிறேன். எனது எழுத்தில் உள்ள
தத்துபித்துக்களை மன்னிக்க. தொடர்ந்து நன்றாக எழுத முயற்சிக்கிறேன்.
நானும் பதிவுலகில் நல்ல ஒரு இடத்திற்கு
வர உங்களது ஆதரவை வேண்டிநிற்கிறேன்.